நூதன முறையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த மூதாட்டி

நூதன முறையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த மூதாட்டி

ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மதுவுக்கு அடிமையானவர்களை இலக்காகக் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.



இந்நிலையில், திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த விமலா என்ற 65 வயது மூதாட்டி, ராம்ஜிநகர் பகுதியில் டீ கேனில் கபசுர குடிநீர் என்ற பெயரில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார்.

இதை அறிந்த போலீசார் கையும் களவுமாக பிடித்து அவரை  கைது செய்தனர். கள்ளச்சாராயம் எங்கு காய்ச்சப்பட்டது, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் டிக்-டாக் வீடியோ பார்த்து சென்னையில் சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்தனர், தேனாம்பேட்டை திருவிக குடியிருப்பைச் சேர்ந்த இருவர் பட்டை, நாட்டு வெல்லம், கடுக்காய் ஆகியவற்றை வாங்கி வந்து சாராயம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், ராஜா மற்றும் அவரது நண்பர் ஜார்ஜ் ஜோசப்-ஐ கைது செய்தனர். அத்துடன், அவர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments