சம்பங்கி பூக்களை பறித்து நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தும் விவசாயிகள்

சம்பங்கி பூக்களை பறித்து நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தும் விவசாயிகள்



புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டார பகுதியில் உள்ள காயாம்பட்டி, மான்கணம் பட்டி, ராயப்பட்டி, செட்டியபட்டி மாஞ்சான்விடுதி, மழவராயன் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பூ சாகுபடி செய்து உள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய, மாநில அரசு சார்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளது.

இதனால் பூக்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. சம்பங்கி பூக்களை பறிக்க தொழிலாளர்கள் கிடைக்காததால், விவசாய குடும்பத்தினரே பூக்களை பறித்து வருகின்றனர். மேலும் அவர்கள் பறித்த பூக்களையும் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். பூக்களை பறிக்க தொழிலாளர்களும் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் விற்பனை செய்யவும் முடியவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளர்.

இந்நிலையில் பயிரிடப்பட்டிருந்த பூக்களை பறித்து அவைகளை நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் ஆயிரக்கணக்கில் செலவு செய்த தொகை கூட கைக்கு வராததால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். இதனால் பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments